செவ்வாய், 5 அக்டோபர், 2010

தீராத நோயெல்லாம் தீர்க்கும் இந்தப்பதிவு!

’’இந்தப்பதிவை தினமும் படித்துவர சொல்லிவர தீராதவியாதியெல்லாம் தீரும் கபம், கண்டமாலை, பித்தவெடிப்பு, கண்வலி,வயிற்றுவலி, மண்டைகொதிப்பு… இப்படி 108 வியாதிகளைக் (விளம்பரத்தின் பின்புறம் உள்ள நோய்ப்பட்டியல் பார்க்க.) குணமாக்கக்கூடியது.
எண்ணி மூன்றே மாதங்களில் படுத்த படுக்கையாக இருப்பவர் எழுந்து நட நடவென்று நடப்பார். நடந்து திரிபவர் படுக்கையில் படுப்பார்(மன்னிக்கவும் இது அச்சுப்பிழை). நடக்கமுடியாதவர் நடப்பார். பேச
முடியாதவர் பாடுவார்.
இது பதிவு என்பதால் படிப்பவர்கள் இந்தப்பதிவைப் படிக்காதவர்கள் பதினைந்துபேருக்கு மின்னஞ்சலில் அனுப்பவேண்டும்.அனுப்பாவிட்டால் நோய் மோசமடையலாம். பதிவர் பிரபல நகரங்களில் லாட்ஜுகளில் தங்கி பதிவை படித்துக்காட்டுவார். நேரம் இடம் என்பன பற்றிப்பார்க்க…”

இப்படி விளம்பரங்கள் புதிதல்ல. ஆங்கில வைத்தியர்கள் தனிப்பட்ட விளம்பரம் செய்யமுடியாது என்பது மருத்துவ நெறி.

பதிவைப்படித்துச் சொல்ல நோய் குணமாகுமா என்று கேட்டால் இந்தப் பதிவையல்ல எந்தப் பதிவை வேண்டுமானாலும் நம்பிக்கையோடு படித்தால் நோய்கள் குணமடையலாம்.

நம்பிக்கை என்று சொன்னால் அது ஒரு பொதுவான/தீவிர நம்பிக்கையாக இருக்கவேண்டும்.உலகம் முழுவதும் அந்தப்பதிவைப்பற்றிப் பேசவேண்டும். பிரபலங்கள் அந்தப்பதிவைப்படித்து எனக்கிருந்த சிக்கல் தீர்ந்ததென்று பத்திரிக்கைகளில் சொல்லவேண்டும். நீங்கள் எதையும் நம்பும் இயல்புடையவராக இருக்கவேண்டும்
படிக்கத்தொடங்கும்போது முள்ளந்தண்டில் ஒரு குறுகுறுப்பு வரும் என்று பத்திரிகையில் எழுதியிருந்தால் உங்களுக்கும் குறு குறுப்பு வரும். குணமடையக்கூடிய நோய் உங்களுக்கு இருந்தால் ஒரு முப்பது வீதம் குணமடைக்கூடும்.

இது என்ன மந்திரமோ என்று கேட்டால் மந்திரம் ஒன்றுமில்லை.
அது ப்ளசிபோ PLACEBO விளைவு என்பார்கள்.
அப்படியென்றால் திருப்தியடைவது என்று அர்த்தம். அதாவது ’’திருப்தி’’ வைத்தியம். நம்பவைத்து குணப்படுத்துவது
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரையை பரிசோதிக்கும்போது மருந்து மாதிரியான டம்மி மத்திரைகளை அரைவாசிப்பேருக்கும் நிஜ மாத்திரையை மிகுதிப்பேருக்கும் கொடுப்பார்கள்.
அப்போது அவர்கள் அவதானித்ததுதான் இந்த ப்ளசிபோ விளைவு.
தலை வலிக்கிற முப்பது பேருக்கு டம்மி தலைவலி மாத்திரைகளை கொடுத்தால் அதில் பத்து பேருக்கு தலைவலி போய்விடும்.
வலியால் தவிக்கும் புற்றுநோயாளிகளில் கூட இதை அவதானித்திருக்கிறார்கள். டம்மி மாத்திரைகளைக்கொடுத்த்போது சிலரில் வலி குறைந்துபோனதாம்.
அவர்கள் அந்த மாத்திரைக்கு குணப்படுத்தும் சக்தியிருப்பதாக நம்புவதுதான்
இதற்கு காரணம் என்ன?
பல காரணங்களைச் சொல்கிறார்கள்.
அதில் நோய்வாய்ப்படுவதிலும் நோய்குணமடைவதிலும் மனத்திற்கு நிறையவே பங்கு இருக்கிறது என்பது முக்கியமானஒன்று.தவிர,
நோய்கள் தாமாகவே குணமடையலாம்.எளிய உதாரணம் தடிமன் போன்ற அனேகமான வைரஸ் காய்ச்சல்கள் 5-6 நாட்களில் குணமடைந்து விடுகின்றன.மருந்துகள் எவையும் தேவைப்படுவதில்லை.
ஆனால் அச்சப்படுகிற ஒரு அம்மா தன் குழந்தையை உடனேயே மருத்துவரிடம் கொண்டு போய்விடுவாள். மருத்துவர் காய்ச்சல் தணிக்கும் மருந்துப்பாணியைக் கொடுப்பார். அம்மாவுக்கும் திருப்தி டாக்டருக்கும் திருப்தி. ஆனால் நோய் தானாகவே குணமடைந்துவிடும்.
உளச்சிக்கல்கள் உடல் நோய்களாக வெளிப்படுவதுண்டு. சாதாரண தலைவலியிலிருந்து வலிப்பு மயக்கம் திடீரென பேசமுடியாது போதல் நடக்கமுடையாதுபோதல் என பலவிதமான நோய்கள் இருக்கின்றன. இவை இந்த திருப்தி வைத்தியத்தில் குணமடையக்கூடும். அல்லது ஒரு நம்பிக்கை பிரார்த்தனை போன்றவற்றில அதிசயமாய்க்குணமடைய முடியும்

போலி மருத்துவர்களும், சாமியார்களும், இன்னும்பலரும் இந்த மூன்றில் ஒரு பங்கு ‘திருப்தி’ வைத்தியப் பகுதியிலேயே வாழுகிறார்கள்.
சிலர் இப்படி திருப்தி சிகிச்சை எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

நன்றி
அ.கிருஷ்ணேந்திரன்



2 கருத்துகள்:

சுந்தரா சொன்னது…

உளச்சிக்கல்கள் உடல் நோய்களாக வெளிப்படுவதுண்டு. சாதாரண தலைவலியிலிருந்து வலிப்பு மயக்கம் //திடீரென பேசமுடியாது போதல் நடக்கமுடையாதுபோதல் என பலவிதமான நோய்கள் இருக்கின்றன. இவை இந்த திருப்தி வைத்தியத்தில் குணமடையக்கூடும். அல்லது ஒரு நம்பிக்கை பிரார்த்தனை போன்றவற்றில அதிசயமாய்க்குணமடைய முடியும்//

நிஜம்தான்...நல்ல பதிவு.

பகிர்வுக்கு நன்றி!

விடுதலை சொன்னது…

சுந்தரா அவர்களுக்கு தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி